தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி, லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்று மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில், பி.டி. அரசகுமார் மற்றும் முத்துக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோசடி தொடர்பாக, பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகத்தினர் அரசகுமார் மீது புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி, பி.டி. அரசகுமார் என்பவர் லட்சக்கணக்கில் பணம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் தரப்பில் புகார்கள் அளிக்கப்பட்டன. இந்த முறைகேடு மற்றும் பணமோசடி சம்பவங்கள் அனைத்தும் கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்றதாக புகார்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுமார் 100 கோடி ரூபாய் வரை மோசடி நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த விசாரணையின் தொடர்ச்சியாக, பி.டி. அரசகுமார் மற்றும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் முத்துக்குமார் ஆகிய இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
மேலும், அரசகுமார் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளிடமிருந்து பணம் வசூலித்திருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகத்தினர், அரசகுமாரின் மோசடி குறித்து புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவித்துள்ளனர். நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட அரசு அனுமதிகளை பெற்று தருவதாக கூறி பணம் வசூலித்ததாக புகார்கள் எழுந்துள்ளன.