பொது விநியோகத்திற்காக ஒதுக்கப்பட்ட ரேசன் அரிசியை, கட்சி நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் விநியோகிப்பது சட்டவிரோதமானது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரை மேற்கு தொகுதியில் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது: 'முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் ரேசன் அரிசி சட்டவிரோதமாக பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. பொது விநியோக திட்டத்தின் கீழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரிசியை, மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. S.R. தங்கப்பாண்டி என்பவர் நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் விநியோகம் செய்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.'
மேலும் அவர், 'மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரே ரேசன் அரிசியை சட்டவிரோதமாக கடத்தி விநியோகித்தாரா அல்லது கடத்தல் கும்பலிடம் இருந்து வாங்கி விநியோகித்தாரா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். இதில் தொடர்புடைய அனைவர் மீதும் பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்கள் நலனுக்காக அரசு ஒதுக்கும் ரேசன் அரிசியை அரசியல் நோக்கங்களுக்காக தவறாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும், இதுகுறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.