சென்னையில் மனமகிழ் மன்றம் அமைப்பதற்கான கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகள், 1981-ல் திருத்தம் செய்து புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த திருத்தங்கள் வரும் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னையில் மனமகிழ் மன்றம் தொடங்க சிறப்புக் கட்டணமாக ரூ.15 லட்சம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த கட்டணம் ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மதுபான உரிமத்திற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.10,000 ஆகவும், உரிமக் கட்டணம் ரூ.30,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியைத் தவிர்த்து, மற்ற மாநகராட்சிகளில் மனமகிழ் மன்றங்கள் தொடங்க கட்டணம் ரூ.25 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நகராட்சிகளில் ரூ.15 லட்சமும், பிற பகுதிகளில் ரூ.10 லட்சமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 10 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட மாநகராட்சிகளுக்கு ரூ.20 லட்சம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டண உயர்வு, மனமகிழ் மன்றங்கள் அமைக்கும் உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை, மதுபான உரிம நடைமுறைகளில் ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.