டெல்லி: 2026 ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து பரிதாப நிலையில் தவித்து வருகிறது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. அந்த அணியின் தொடர் தோல்விகளுக்கு வீரர்களின் மோசமான ஆட்டத்தை விட, அணி நிர்வாகத்தின் தவறான முடிவுகளே முக்கிய காரணம் என கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக அதிரடி தொடக்க வீரரான பிரித்வி ஷாவை ஒரு போட்டியில் கூட களமிறக்காமல் தொடர்ந்து ஓரங்கட்டி வருவது பற்றி முன்னாள் வீரர் முரளி கார்த்திக் பேசி இருக்கிறார்.
அக்சர் படேல் தலைமையிலான டெல்லி அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் படுதோல்வியை சந்தித்ததன் மூலம், பிளே ஆப் பந்தயத்தில் இருந்து கிட்டத்தட்ட வெளியேறிவிட்டது. மீதமுள்ள 3 போட்டிகளில் அந்த அணி தங்களது ஆறுதல் வெற்றிக்காக மட்டுமே விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த சீசன் முழுவதுமே டெல்லி அணி நிர்வாகத்தின் பல உத்திகள் மற்றும் முடிவுகள் கேலிக்கூத்தாகவே அமைந்துள்ளன. டேவிட் மில்லர் போன்ற சிறந்த அதிரடி ஆட்டக்காரரை எதற்காக தொடர்ந்து பெஞ்சில் உட்கார வைத்துள்ளார்கள் என்பது யாருக்கும் புரியாத புதிராகவே உள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டனான பிரித்வி ஷாவை தொடர்ந்து புறக்கணிப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. 2025ல் ஏலத்தில் விலைபோகாத இவரை, 2026 சீசனுக்காக 75 லட்சம் ரூபாய்க்கு டெல்லி அணி வாங்கியது. ஆனால் இதுவரை ஒரு போட்டியில் கூட அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. கே.எல். ராகுலுடன் பதும் நிசங்கா தொடக்க வீரராக களமிறங்கி வருகிறார்.
ஒரு போட்டியில் நிசங்காவிற்கு ஓய்வு அளிக்கப்பட்ட போது கூட, பிரித்வி ஷாவிற்கு வாய்ப்பு தராமல் சஹில் பராக் என்பவரை களமிறக்கினர். டெல்லி அணியின் வலைப்பயிற்சி வீடியோக்களில் மட்டும் பிரித்வி ஷா இடம்பெறுகிறார். ஆனால் ஏன் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது என அணி நிர்வாகம் இதுவரை வாய் திறக்கவில்லை.
இது குறித்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளி கார்த்திக் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக ஃபார்ம் இல்லாமல் இருந்த பிரித்வி ஷாவை ஏதோ ஒரு லாஜிக் வைத்து தான் ஏலத்தில் எடுத்தீர்கள். ஆனால் அவரை ஒருமுறை கூட அணியில் சேர்க்கவில்லை. ஒரு தலைசிறந்த தொடக்க வீரரை அணியில் வைத்துக்கொண்டு, அவரை தவிர மற்ற அனைவரையும் பரிசோதித்து பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் என அணி நிர்வாகத்தை சரமாரியாக விளாசியுள்ளார்.