சென்னை: தவெக தலைவர் விஜய்க்கு இன்னும் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் கிடைக்காத நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கத் தொடங்கிவிட்டனர்.
தமிழகத்தில் 108 இடங்களில் வென்றுள்ள தனிப்பெரும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சி அமைப்பதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் (5), இந்திய கம்யூனிஸ்ட் (2) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2) கட்சியின் ஆதரவு தவெக-வுக்கு கிடைத்துள்ளது. எனினும் இன்னும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது முடிவை அறிவிக்கவில்லை. இதனால் தவெகவுக்கு பெரும்பான்மை கிடைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்தச் சூழலில், நேற்றைய தினமும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு தெரிவித்து விட்டதாகவும், இதனால் விஜய் ஆட்சியமைக்க தேவையான 118 உறுப்பினர்கள் கிடைத்துவிட்டதாக தகவல் பரவியது. இதற்கு முஸ்லிம் லீக் கட்சி சில மணி நேரங்களில் மறுப்பு தெரிவித்து விட்டது. எனினும் இந்த செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே திரையுலக பிரபலங்கள் பலரும் ‘ஜோசப் விஜய் எனும் நான்’ என்ற கேப்ஷனோடு விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்க தொடங்கி விட்டனர்.
இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகைகள் குஷ்பு, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் இதே கேப்ஷனை பயன்படுத்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதேபோல இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது எக்ஸ் பதிவில், “தலைவன் முதலமைச்சராக பதவியேற்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Congratulations once again to our Honourable Chief Minister Thalapathy Vijay Anna on winning the final battle. His historic victory is a true lesson in how a person must remain resilient during times of adversity and stay committed to one’s principles despite all the obstacles… pic.twitter.com/jf8PVASQFr
நடிகர் சிபிராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், “இறுதிப் போரில் வெற்றி வாகை சூடிய நமது மதிப்புக்குரிய முதலமைச்சர் தளபதி விஜய் அண்ணா அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை மனமார்ந்த வாழ்த்துகள்.
இடர்பாடுகள் நிறைந்த காலங்களில் ஒரு மனிதர் எவ்வாறு மன உறுதியுடன் திகழ வேண்டும் என்பதற்கும், எத்தகைய தடைகள் குறுக்கிட்டாலும் தனது கொள்கைகளில் எவ்வாறு உறுதியுடன் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்கும், அவரது வரலாற்று சிறப்புமிக்க வெற்றி ஒரு சிறந்த பாடமாகத் திகழ்கிறது.
இது வெறும் அரசியல் வெற்றி மட்டுமல்ல; மாறாக, தமிழ்நாட்டிற்கான ஒரு புதிய பாதையையும், புதிய நம்பிக்கையையும் முன்னிறுத்தி மக்கள் வழங்கியிருக்கும் ஓர் ஆணை” என்று வாழ்த்தியுள்ளார்.