அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்ததுடன், ஒரு மோசமான சாதனையையும் படைத்துள்ளது. இந்த வரலாற்றுத் தோல்விக்கு மத்தியில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் வியூகங்கள் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன. குறிப்பாக, 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு கம்பீர் கொடுத்த 'முதல் நாள் டியூட்டி' பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும், இந்தியா ஏ அணிக்காகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யவன்ஷிக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கம்பீரின் திட்டத்தில் அவருக்கு பேட்டிங் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாறாக, மைதானத்திற்குள் சக வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்லும் 'வாட்டர் பாய்' பணியே அவருக்கு அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு ஆதரவளிப்பதாகக் கூறினார். ஆனால், சாம்சன் 5 ரன்களிலும், இஷான் கிஷன் 1 ரன்னிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 3 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். இதைப் பார்த்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், உலகின் சிறந்த டி20 வீரர்களில் ஒருவரான சூர்யவன்ஷியை இந்திய அணி தேர்வு செய்யாததை நம்ப முடியவில்லை என எக்ஸ் தளத்தில் நக்கலாகப் பதிவிட்டுள்ளார்.
இந்தப் போட்டியில் 183 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா, 148 ரன்களுக்கு சுருண்டது. கம்பீரின் இந்த புதிய வியூகத்தால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள், அவரை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கோஷமிடத் தொடங்கியுள்ளனர். அதேசமயம், வைபவ் சூர்யவன்ஷியை துவக்க வீரராக களமிறக்க வேண்டுமெனில், அபிஷேக் சர்மா அல்லது சஞ்சு சாம்சன் ஆகிய இருவரில் ஒருவரை நீக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். சஞ்சு சாம்சன் டி20 உலகக்கோப்பையை வெல்ல முக்கியப் பங்காற்றியவர். எனவே, வைபவ் சூர்யவன்ஷியை அணியில் சேர்க்க முடியாத நிலை உள்ளதாக இந்திய அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.