இலங்கை ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் இந்திய ஏ அணி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. கேப்டன் துருவ் ஜூரல் அடித்த அபாரமான சதம் (141 ரன்கள்) மற்றும் அவரது பொறுப்பான ஆட்டத்தால் இந்திய ஏ அணி 6 விக்கெட் இழப்புக்கு 452 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை ஏ அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்துள்ளது. இதனால், இந்திய அணியை விட 339 ரன்கள் பின்தங்கியுள்ளது.
இந்திய பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்திலேயே இலங்கை ஏ அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். அன்ஷுல் கம்போஜ், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் நிரோஷன் டிக்வெல்லாவை 10 ரன்களில் ஷேக் ரஷீத்திடம் கேட்ச் கொடுத்து வெளியேற்றினார். பின்னர், யாஷ் தாக்கூர் பவன்தா வீரசிங்கவை 11 ரன்களில் போல்ட் ஆக்கினார். இதனால் இலங்கை ஏ அணி 38 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
எனினும், நுவானிடு பெர்னாண்டோ (65 ரன்கள்) மற்றும் அஷேன் பண்டார (18 ரன்கள்) ஜோடி பொறுப்புடன் விளையாடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் தடுத்தது. இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு பிரிக்கப்படாத 75 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய ஏ அணி தரப்பில் கேப்டன் துருவ் ஜூரல் 215 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 141 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார். அவருடன் விளையாடிய ஷேக் ரஷீத் 63 ரன்களில் ஆட்டமிழந்தார்.
முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா ஏ அணி சாய் சுதர்சனின் 132 ரன்கள் பங்களிப்புடன் 4 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் எடுத்திருந்தது. இலங்கை ஏ அணி தரப்பில் சாமிக குணசேகரா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்ஷ் துபே (30 ரன்கள்) கேப்டன் ஜூரலுடன் இணைந்து 6-வது விக்கெட்டுக்கு முக்கியமான 86 ரன்கள் சேர்த்தார்.