அகமதாபாத்தில் ஒரே ஓடுபாதையில் நேருக்கு நேர் வந்த இரு விமானங்களால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 164 பயணிகளுடன் அகமதாபாத் வந்த ஏர் இந்தியா விமானத்தின் விமானி, ஓடுபாதையில் இருந்து விமானம் நிறுத்தும் இடத்திற்குச் செல்லும் டாக்சி பாதையைத் தவறாகத் தேர்வு செய்துள்ளார். அதே நேரத்தில், அதே முதன்மை ஓடுபாதையில் இண்டிகோ விமானம் ஒன்று புறப்படத் தயாராக இருந்தது. இதனால், இரு விமானங்களும் நேருக்கு நேர் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டது.
தவறான பாதை என்பதை ஏர் இந்தியா விமானி உணர்ந்துகொண்டதால், இரு விமானங்களும் பாதுகாப்பான தூரத்தில் நின்றன. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஏர் இந்தியா விமானம் அங்கிருந்து அகற்றப்பட்டது. இண்டிகோ விமானம் சுமார் 20 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றதாக இண்டிகோ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பயணிகளின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்யப்படவில்லை என ஏர் இந்தியா நிறுவனம் தனது அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
விமானி செய்த இந்தச் சிறிய தவறு, பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக, இரு விமானங்களும் ஒன்றையொன்று கவனித்து, உரிய நேரத்தில் நின்றதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.