தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த எ.வ. வேலு மீது ஊழல் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், 'ஊழல் குற்றவாளிகள் இன்னும் களையப்பட வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எ.வ. வேலு மீது, அறப்போர் இயக்கம் அளித்த ஊழல் புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. பணிகள் முடிக்கப்படாமலேயே முடிக்கப்பட்டதாகக் கூறி, பல கோடி ரூபாய் அரசு பணத்தில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் தகவல்கள், மக்கள் வரிப்பணம் எவ்வாறு சூறையாடப்பட்டது என்பதற்குச் சான்றாக உள்ளதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீதும் ஊழல் புகார் பதிவு செய்யப்பட்டிருப்பது, கடந்த திமுக ஆட்சியின் ஊழல் வேர்கள் எவ்வளவு ஆழமாகப் பரவியுள்ளன என்பதைக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊழலற்ற நிர்வாகம் மற்றும் வெளிப்படையான ஆட்சியைத் தருவதாகக் கூறி தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கும் முதல்வர், மக்கள் வரிப்பணத்தை சூறையாடிய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்ற நிலையை உருவாக்குவதே நல்லாட்சியின் முதல் அடையாளம் என்றும் வானதி சீனிவாசன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.