அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டத்திற்கு பதிலாக, அந்த நிதியை உயரிய வசதிகளுடன் கூடிய பிரசவ வார்டுகள் அமைக்க பயன்படுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். மேலும், சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முதல்வர் விஜய் ஏளனம் செய்து பேசியதையும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்ட திருமாவளவன், "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்கும் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் ஓரிரு மண்டலங்களில் மட்டும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது, அதனை எதிர்த்து விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போராடின. பின்னர் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது. தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் இந்த நடவடிக்கையை விரிவுபடுத்துவது ஏற்புடையதல்ல. தமது உயிரைப் பணயம் வைத்து இந்தப் பணிகளில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களின் நலன்களுக்கு எதிரான இந்த நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும்" என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
மேலும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'ஒரு கிராம் தங்க மோதிரம்' வழங்கும் திட்டத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் 755 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தவெகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 56 சதவீத குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன. தனியார் மருத்துவமனைகளில் சாதாரண பிரசவத்திற்கே 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையிலும், சிசேரியன் பிரசவத்திற்கு இரண்டரை லட்சம் ரூபாய் வரையிலும் கட்டணம் வசூலிக்கின்றனர். ஏழை எளிய குடும்பத்தினர் கூட தாய்-சேய் பாதுகாப்புக் கருதி தனியார் மருத்துவமனைகளையே நாடுகின்றனர்.
இந்நிலையில், தங்க மோதிரம் வழங்குவதற்காக செலவு செய்யும் இந்த 755 கோடி ரூபாயைக் கொண்டு, அரசு மருத்துவமனைகள் ஒவ்வொன்றிலும் தனியார் மருத்துவமனைகளைப் போல அனைத்து உயரிய வசதிகளையும் கொண்ட 'பிரசவ வார்டுகளை' உருவாக்குவதோடு, தேவையான மருத்துவப் பணியாளர்களையும் நியமிப்பது அனைத்துத் தரப்பினருக்கும் பயன் அளிப்பதாக அமையும் என திருமாவளவன் தெரிவித்தார். மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் பிறந்த குழந்தைக்குப் போடப்படும் தங்க மோதிரம் சில மாதங்களிலேயே கைகளுக்குப் பொருந்தாமலும் போய்விடும் என்பதால், தமிழ்நாடு அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர், நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு இழந்ததை முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஏளனம் செய்யும் வகையில் பேசியிருப்பது 'முதலமைச்சர்' என்னும் பொறுப்புக்குரிய மாண்புக்கு உகந்தது அல்ல என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கட்சி மேடைகளில் பேசும்போதுகூட தவிர்க்க வேண்டிய ஒன்றை, சட்டப்பேரவையில் பேசாமல் தவிர்த்திருக்க வேண்டும். இனிவரும் காலங்களில் சட்டப்பேரவைக்கான மரபையும் முதலமைச்சர் என்னும் மகத்தான பதவிக்குரிய உயரிய மாண்பையும் பேணிப் பாதுகாத்திட வேண்டுமென முதலமைச்சரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.