ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தால் தலா ஒரு கிராம் தங்க மோதிரம் என இரண்டு மோதிரங்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு குழந்தையையும் மற்றும் தாயையும் கௌரவிக்கும் விதமாக 'தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்' (Thaimaaman Thanga Mothiram Thittam) செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கும் தாய்மார்கள் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராகவும், அரசு மருத்துவமனைகளில் பிரசவித்தவராகவும், PICME மென்பொருளில் RCH ID உடன் பதிவு செய்தவராகவும் இருக்க வேண்டும். இத்திட்டம் அனைத்துப் புதுப் பிறப்புகளுக்கும், 'Higher Order Births (HOB)' எனப்படும் கூடுதல் பிரசவங்களுக்கும் எந்தவொரு தடையுமின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது. பாலினப் பாகுபாடின்றி ஆண், பெண் இரு குழந்தைகளுக்கும் தலா ஒரு கிராம் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படும்.
பயனாளிகள் தங்களின் இருப்பிடத்தை உறுதி செய்ய ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை, அஞ்சல் துறை முகவரிச் சான்று அட்டை அல்லது இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் 22 ஜூன் 2026 முதல் பிறக்கும் குழந்தைகள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.
இத்திட்டமானது, பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15, 2026 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் முறைப்படி துவக்கி வைக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் 755.83 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. ஒரே நேரத்தில் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளுக்கு தனித்தனியாக தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.