போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்த புகாரில், முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் இளஞ்செழியன் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, இந்த மோசடி நடைபெற்றதாக கூறப்படுகிறது. வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, இளஞ்செழியனை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளஞ்செழியனிடம் இருந்து பணம் எவ்வாறு கைமாறியது, எவ்வளவு பெரிய மோசடி நடந்துள்ளது, பணம் யாரிடம் சென்று சேர்ந்தது போன்ற விவரங்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கைது நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். அதில், 'மோசடி புகாரில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் உதவியாளர் கைது என வெளியான செய்தி தவறானது. இளஞ்செழியன் என்ற பெயரில் எனக்கு எந்த உதவியாளரும் கிடையாது. செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.