2027 ஆம் ஆண்டிற்கான ஹஜ் பயணத்தை மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடமிருந்து, மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழு விண்ணப்பங்களைப் பெறத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹஜ் 2027-க்காக இந்திய ஹஜ் குழு மூலம் விண்ணப்பிக்க விரும்புவோர், 22.06.2026 முதல் 20.07.2026 இரவு 11.59 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்திய ஹஜ் குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளமான https//hajcommittee.gov.in அல்லது 'HAJ SUVIDHA' செயலியைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யலாம்.
ஹஜ் 2027-க்கான விண்ணப்பப் படிவத்தை கட்டணமின்றி சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது தகுதியை உறுதிப்படுத்த, வழிகாட்டுதல்கள் மற்றும் உறுதிமொழிப் படிவத்தை கவனமாகப் படித்து, பின்வரும் ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகளைப் பதிவேற்ற வேண்டும்: குறைந்தது 31.12.2027 வரை செல்லுபடியாகும் இந்திய கடவுச்சீட்டின் (Passport) முன் மற்றும் பின் பக்கங்கள், வங்கிப் புத்தகத்தின் நகல் அல்லது ரத்து செய்யப்பட்ட காசோலை (590 x 750 px. JPG/JPEG, 80-250 KB), மற்றும் முகவரிச் சான்று.
கடந்த ஆண்டைப் போலவே, தேர்ந்தெடுக்கப்பட்ட ஹஜ் பயணிகள் இரண்டு புறப்பாட்டுத் தளங்களை விருப்ப வரிசைப்படி தேர்ந்தெடுக்கலாம். இந்திய ஹஜ் குழு மூலம் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியும் என்ற விதிமுறை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஹஜ் 2027-ற்கான விரிவான வழிமுறைகளை இந்திய ஹஜ் குழுவின் இணையதளம் அல்லது 'HAJ SUVIDHA' செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம். பாஸ்போர்ட்டுக்குப் புதிதாக விண்ணப்பிப்பவர்கள், குடும்பப் பெயர்/கடைசிப் பெயர் ஆகியவற்றை கண்டிப்பாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.
புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள தேர்ந்தெடுக்கப்படும் பயணிகள், நபர் ஒருவருக்கு முதல் தவணையாக ரூ.1,52,300/- செலுத்தத் தயாராக இருக்க வேண்டும். மேலும், தங்களிடம் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் உள்ளதை உறுதி செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 20.07.2026 ஆகும். ஹஜ் பயணிகள் மரணம் அல்லது கடுமையான மருத்துவ நோய் தவிர வேறு காரணங்களுக்காக பயணத்தை ரத்து செய்தால் அபராதம் விதிக்கப்படும், இதனால் நிதி இழப்பு ஏற்படக்கூடும். எனவே, ஹஜ் பயணம் மேற்கொள்ள விருப்பமுள்ளவர்கள், தங்களது தயார்நிலை மற்றும் பயணத்திற்கான உறுதிப்பாட்டை கவனமாகப் பரிசீலித்த பின்னரே விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.