முதலமைச்சர் விஜய், கள யதார்த்தம் தெரியாமல் கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்டை பேசி, இன்றும் நடிகராகவே செயல்படுகிறார் என்று முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குற்றச்செயல்களில் ஈடுபட்ட திமுகவினா் குறித்து முதலமைச்சர் வாய் திறக்கவில்லை. உங்கள் அப்பா என் மகன் என் கட்டுப்பாட்டில் இல்லை என பேசியது நினைவில்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், இதுவரை நடந்த ஆட்சி ஊழல் ஆட்சி என்றும், தாங்கள் மட்டுமே ஊழலற்ற ஆட்சி செய்வதாக ஒரு பிம்பத்தை உருவாக்க முதலமைச்சர் விஜய் முயற்சிக்கிறார் என்றும் சிவசங்கர் குற்றம்சாட்டினார். “என்மீது கூட ஒரு வழக்கு போடுங்கள், நாங்கள் மிரட்டல்களுக்கு அஞ்சுபவர்கள் இல்லை. இந்திரா காந்தியை தெரியுமா? மிசா உள்ளிட்ட எத்தனையோ கைதுகளை பார்த்தவர்கள் நாங்கள்” என்றும் அவர் ஆவேசமாக கூறினார்.
சட்டமன்றத்தில் இன்று வசனம் பேசியது போல் பேசுவது என்றும் உதவாது என்றும், முதலமைச்சர் விஜய் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் சிவசங்கர் வலியுறுத்தினார். திமுக மீது களங்கம் உருவாக்க நினைத்தால் அது நடக்காது என்றும் அவர் எச்சரித்தார்.