கம்பம் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா அம்மா உணவகத்தில் ஆய்வு செய்தபோது தோசை சாப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஊழியர்கள் முக்கிய விளக்கம் அளித்துள்ளனர். பல ஆண்டுகளாக இந்த அம்மா உணவகத்தில் தோசை விற்பனை செய்யப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட கம்பம் த.வெ.க. எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா, அங்கு தோசை சாப்பிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அம்மா உணவகத்தில் தோசை வழங்கப்படுவதில்லை என்ற நிலையில், எம்.எல்.ஏ-வுக்கு மட்டும் எங்கிருந்து தோசை கிடைத்தது என நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பினர். இது தொடர்பாக 'ரீல்ஸ் ஆட்சியில் இருந்து எப்போதுதான் தவெக அரசு விழிக்கும்?' என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
இந்த சர்ச்சை குறித்து அம்மா உணவக ஊழியர் ஒருவர் அளித்துள்ள பேட்டியில், 'கொரோனா காலத்திலிருந்தே நாங்கள் இங்கு தோசை விற்பனை செய்து வருகிறோம். நேற்று எம்.எல்.ஏ வந்தபோது அவருக்காக எதுவும் புதிதாக செய்யவில்லை. நாங்கள் அன்றாடம் செய்துகொண்டிருந்த தோசையில் ஒன்றை அவருக்குக் கொடுத்தோம். அவர் சாப்பிட்டுவிட்டு சென்றார். கொரோனா காலத்திற்கு முன்பு இட்லி மட்டுமே விற்பனை செய்து வந்தோம். ஆனால், மக்கள் அதிகமாக தோசை கேட்டதால், அதன் விற்பனையையும் தொடங்கினோம்' என்று விளக்கமளித்துள்ளார்.
இதன் மூலம், அம்மா உணவகத்தில் தோசை விற்பனை என்பது எம்.எல்.ஏ வந்த பிறகு தொடங்கியது அல்ல என்றும், அது பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதாகவும் ஊழியர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். மக்களின் விருப்பத்திற்கேற்ப உணவுப் பட்டியலில் மாற்றங்கள் செய்யப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.