தம்புலாவில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய ஏ அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 11 பந்துகளில் அரைசதம் அடித்து லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்துள்ளார். இந்த அதிரடி ஆட்டத்தில் அவர் 5 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளை விளாசியுள்ளார்.
இலங்கை ஏ அணிக்கு எதிரான இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இலங்கை கேப்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய ஏ அணிக்காக தொடக்க வீரர்களாக பிரியன்ஷ் ஆர்யா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர். முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகளை அடித்த வைபவ், மூன்றாவது ஓவரில் முகமது சிராஸ் வீசிய ஒரே ஓவரில் 26 ரன்களை குவித்தார். இதன் தொடர்ச்சியாக, நான்காவது ஓவரில் மேலும் அதிரடியாக விளையாடி, வெறும் 11 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் என அரைசதத்தை எட்டி அசத்தினார்.
வைபவ் சூர்யவன்ஷியின் இந்த இன்னிங்ஸ், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிவேக அரைசதம் என்ற சாதனையை முறியடித்துள்ளது. இதற்கு முன்னர் 12 பந்துகளில் அரைசதம் அடித்ததே சாதனையாக இருந்தது. 2015ல் பாகிஸ்தானுக்கு எதிராக குசால் பெரேரா இந்த சாதனையை படைத்திருந்தார். தற்போது 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, இந்த சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, போட்டிக்கு முன்பு இலங்கை ஏ அணி வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷியை ஸ்லெட்ஜிங் செய்து சீண்டியுள்ளனர். இதற்கு பதிலடியாக, முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய வைபவ், இலங்கை அணியின் விஷன் ஹலம்பாகேயை தள்ளிவிட்ட சம்பவமும் அரங்கேறியது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, களத்தில் தனது அதிரடி ஆட்டம் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி.