ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அதிரடியாக சதம் விளாசிய இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், தனது சிறப்பான ஆட்டத்திற்கு முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா அளித்த ஆலோசனைகளே காரணம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 219 ரன்கள் இலக்கை இந்திய அணி 28.4 ஓவர்களிலேயே எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
24 வயதான ஜெய்ஸ்வால், 'நான் இந்த ஆட்டத்தை மிகவும் ரசித்து விளையாடினேன். தொடக்கத்தில் கிடைத்த பவர்பிளே ரன்கள் எனக்கு நம்பிக்கையளித்தன. ஆட்டத்தின் இறுதிவரை களத்தில் நின்று விளையாட வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருந்தது. எனது கட்டுப்பாட்டில் உள்ள விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். பயிற்சியாளர்கள் மற்றும் சக வீரர்களின் ஆதரவு எனக்கு எப்போதும் உண்டு. அவர்களின் தெளிவான தகவல் பரிமாற்றம், அணியின் வியூகங்களை எளிதாகப் புரிந்துகொள்ள உதவியது' என்று கூறினார்.
'கிடைத்த வாய்ப்புகளை பெரிய இன்னிங்ஸாக மாற்ற முயன்றேன். கிரிக்கெட்டில் நம்முடைய நாள் சிறப்பாக அமையும் போது, அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நான் உணர்ந்துள்ளேன். சமீபகாலமாக சில போட்டிகளில் கடுமையாக முயன்றும் ரன் குவிக்க முடியவில்லை. ஆனால் இன்று எனது கவனத்தை சிதறவிடாமல், ஒரு ரன் வீதம் எடுத்து விக்கெட்டை தக்கவைத்துக் கொள்ள உறுதியாக இருந்தேன்' என்றும் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
ரோஹித் சர்மா உடனான தனது உறவு குறித்துப் பேசிய ஜெய்ஸ்வால், 'ரோஹித் பையா எப்போதும் எனக்கு ஆதரவாக இருக்கிறார். அவரிடம் நான் பல சந்தேகங்களைக் கேட்டு, அவற்றை எனது ஆட்டத்தில் செயல்படுத்த முயற்சிப்பேன். இன்றைய போட்டியிலும் என்னால் ரன் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டபோது அவரிடம் ஆலோசனை கேட்டேன். அப்போது அவர் என்னை ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்யுமாறும், ரன் குவிக்கும் வேகத்தைக் குறைக்காமல் விளையாடுமாறும் அறிவுறுத்தினார். அவரது அந்த ஆலோசனை எனக்குப் பெரிதும் உதவியது. அவருடன் இணைந்து விளையாடுவதை நான் எப்போதும் பெருமையாகக் கருதுகிறேன்' என்றார். இந்த ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் 86 பந்துகளில் 110 ரன்கள் குவித்து தனது 2-வது ஒருநாள் சர்வதேச சதத்தைப் பதிவு செய்தார்.