நீட்-யுஜி மறுதேர்வு வரும் ஜூன் 21 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வை எவ்வித குளறுபடிகளும் இன்றி சுமூகமாக நடத்த மத்திய கல்வி அமைச்சகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்தியாவிற்குள் 551 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நாளை மறுநாள் இந்த தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.15 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாலை 6.20 மணி வரை தேர்வு எழுத அவகாசம் வழங்கப்படும். தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பகல் 1.30 மணிக்கு தேர்வு மையங்களின் நுழைவுவாயில்கள் மூடப்படும்.
எனவே, மாணவர்கள் காலை 11 மணி முதல் 1.30 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வந்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நீட்-யுஜி மறுதேர்வுக்கான ஏற்பாடுகளை மத்திய கல்வி அமைச்சகம் தீவிரப்படுத்தியுள்ளது.
மேலும், 36 மூத்த அதிகாரிகள் நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் தேர்வுப் பணிகளை நேரடியாக ஒருங்கிணைத்து, தேர்வு சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.