சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதம் தொடங்கியபோது நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 'ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை' என த.வெ.க அரசை விமர்சித்துள்ள அவர்கள், இந்த செயல்பாடு ஜனநாயக விரோதமானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முதல்வர் ஜோசப் விஜய் கொண்டு வந்த மேகதாது தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட பிறகு, ஆளுநர் உரை மீதான விவாதம் தொடங்கியவுடன் சட்டசபை நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. இது குறித்து அதிமுக ஐடி விங் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
'முழு நேரலை… முழு நேரலை… அத்தனையும் உருட்டா சார்! ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்' என த.வெ.க அரசின் தேர்தல் கால வாக்குறுதியை அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது. நேரலையை நிறுத்தியதைச் சுட்டிக்காட்டி, 'மக்களுக்குக் கொடுத்த எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றுகிற மாதிரி உங்களுக்கு ஐடியாவே இல்லை போல, அப்படித்தானே சார்!' என அதிமுக ஐடி விங் கேள்வி எழுப்பியுள்ளது.
நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும், மக்களின் ஜனநாயக உரிமையை பறிக்கும் செயல் என்றும் அதிமுக ஐடி விங் தெரிவித்துள்ளது. மக்களின் குரலை நசுக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர்கள், இது போன்ற செயல்கள் த.வெ.க அரசின் மீதுள்ள நம்பிக்கையை குறைக்கும் என்றும் எச்சரித்துள்ளது.