இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, காயத்திலிருந்து மீண்டு விரைவில் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளார். அவர் எப்போது களமிறங்குவார், எந்த தொடரில் இந்திய அணியுடன் இணைவார் என்ற தகவலை பிசிசிஐ வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன.
ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடியபோது விராட் கோலிக்கு தொடை தசைநார் காயம் ஏற்பட்டது. இதனால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து அவர் விலக நேரிட்டது. அவருக்கு பதிலாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டார். டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்ட 37 வயதான விராட் கோலி, தற்போது சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது பெங்களூரில் உள்ள பிசிசிஐ சிறந்த செயல்பாட்டு மையத்தில் விராட் கோலி தீவிர உடற்பயிற்சி மற்றும் மறுவாழ்வு சிகிச்சையில் ஈடுபட்டுள்ளார். அவரது காயம் மிக வேகமாக குணமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அங்கு அவரது உடற்தகுதி குறித்து இறுதி கட்ட பரிசோதனை நடைபெற உள்ளது. அதில் தேர்ச்சி பெற்றவுடன், அவர் மீண்டும் தேசிய அணியில் இணைவதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.
இந்திய அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான ஒருநாள் அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி அடுத்த 3 முதல் 4 நாட்களுக்குள் தேர்வு செய்யப்பட உள்ளதாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார். இந்த ஒருநாள் தொடர் வரும் ஜூலை 14 அன்று பர்மிங்காமில் தொடங்குகிறது. இங்கிலாந்துக்கு எதிரான இந்த தொடரின் மூலம் விராட் கோலி மீண்டும் சர்வதேச கிரிக்கெட் களத்திற்கு திரும்புவார் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.