2013 ஐபிஎல் சூதாட்டப் புகாரில் சிக்கி சிறை சென்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், அந்த இக்கட்டான சூழலில் தனது மனைவி புவனேஸ்வரி அளித்த ஆதரவைப் பற்றி உருக்கமாகப் பேசியுள்ளார். சிறையில் இருந்தபோது, தற்கொலை எண்ணத்தில் இருந்து தன்னை மீட்டெடுத்ததில் அவரது மனைவிக்கு முக்கியப் பங்கு உண்டு என ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
2013 ஐபிஎல் தொடரின் போது, ஸ்பாட் ஃபிக்சிங் சூதாட்டப் புகாரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கித் சவான், அஜித் சண்டிலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து பிசிசிஐ ஸ்ரீசாந்திற்கு வாழ்நாள் தடை விதித்தது, பின்னர் அந்தத் தடை நீக்கப்பட்டது.
இது குறித்துப் பேசிய ஸ்ரீசாந்த், 'நான் சிறையில் இருந்தபோது, தற்கொலை செய்து கொள்ளாமல் இருந்ததற்கு மிக முக்கியக் காரணங்களில் ஒன்று என் மனைவி புவனேஸ்வரிதான். 2011 உலகக் கோப்பையை வென்றால் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று 2010-ல் அவரிடம் வாக்குறுதி அளித்திருந்தேன்' என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் ஸ்ரீசாந்த் முக்கியப் பங்கு வகித்தார்.
43 வயதான ஸ்ரீசாந்த், 27 டெஸ்ட் போட்டிகளில் 87 விக்கெட்களையும், 53 ஒருநாள் போட்டிகளில் 75 விக்கெட்களையும், 10 டி20 போட்டிகளில் 7 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் 44 ஆட்டங்களில் 40 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். தடைகள் நீங்கி மீண்டும் களமிறங்கிய அவர், மார்ச் 2022 இல் ஓய்வை அறிவித்தார்.
தனது மனைவியுடனான சந்திப்புகள் குறித்துப் பேசிய ஸ்ரீசாந்த், 'அவள் 10-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது முதல் முறை பார்த்தேன். 2013 வரை தொடர்பில் இருந்தோம். ஐந்து முக்கியச் சந்திப்புகள் திருமணத்திற்கு வழிவகுத்தன. முதல் சந்திப்பு நான் சிறப்பு விருந்தினராகச் சென்ற பள்ளியில் நடந்தது. இரண்டாவது சந்திப்பு அடுத்த நாளே கிரிக்கெட் மைதானத்தில் அமைந்தது. மூன்றாவது சந்திப்பு மூன்று ஆண்டுகள் கழித்து 2010-ல் நீச்சல் குளத்திற்கு அருகில் நடந்தது. நான்காவது சந்திப்பு இந்தூரிலும், ஐந்தாவது சந்திப்பான எங்களது திருமண நிச்சயதார்த்த முறை (ரோகா) நான் பிணையில் (Bail) வெளியில் வந்திருந்தபோது நடந்தது' என்றார்.
மேலும், தனது இக்கட்டான சூழ்நிலையிலும் திருமணத்திற்குச் சம்மதித்த மனைவியின் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். 2012 இல் கால் விரல் அறுவை சிகிச்சைக்குப் பின், பக்கவாதம் ஏற்பட 17 சதவீத வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறியபோது, தன்னால் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட முடியுமா என்று தெரியாததால் திருமணம் செய்ய முடியாது என்று மாமியாரிடம் கூறியதாகவும், ஆனால் அத்தனை சவால்களையும் தாண்டி, வாழ்வின் மோசமான கட்டத்திலும் திருமணத்தை நடத்த அவர்கள் சம்மதித்ததாகவும், தான் பிணையில் வெளிவருவதற்கும் அவரே முக்கியக் காரணம் என்றும் ஸ்ரீசாந்த் குறிப்பிட்டுள்ளார்.