தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்றினார். இதில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றன. இருமொழிக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் என்றும், உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வலியுறுத்தப்படும் என்றும் ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார்.
மாநிலத்தின் நிதி நிலைமையை சீரமைத்து, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றப்படும் என உறுதியளித்த ஆளுநர், தொழில் முதலீட்டை ஈர்க்க புதிய தொழில்கொள்கை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார். ஒன்றிய அரசுக்குச் செலுத்திய வரிகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நிதிப் பகிர்வுப் பங்கைத் தரக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும், இதற்காக உச்ச நீதிமன்றம் வரை சட்டப்பூர்வமாக கொண்டு செல்ல சிறப்புச் சட்டக் குழு அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்புப் போதைப்பொருள் தடுப்புப் படை அமைக்கப்படும் என்றும், போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழிக்க அரசு உறுதியுடன் செயல்படும் என்றும் ஆளுநர் தெரிவித்தார். அனைத்துத் துறை சார்ந்த கொள்முதல்களும், ஒப்பந்தப் புள்ளிகளும் கடுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் என்றும், அரசு நிர்வாகத்தில் ஊழலுக்கு முடிவு கட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், விவசாயிகளுக்கு ரூ.6000 கோடி கடன் தள்ளுபடி, விவசாயத்திற்கு நவீன தொழில்நுட்ப ஆதரவு, தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு, காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும், காவிரி உரிமைக்காக சட்டப் போராட்டம், மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு, முல்லைப் பெரியாறு உரிமையில் உறுதி, கீழடி, ஆதிச்சநல்லூருக்கு யுனெஸ்கோ அங்கீகாரம், 2036-க்குள் 1.5 மில்லியன் டாலர் பொருளாதாரம், தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் தொடக்கம், வறுமையற்ற தமிழகம் உருவாக்கம், 2031-க்குள் நகர்ப்புற வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக தமிழகத்தை மாற்ற நடவடிக்கை, அரசு நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தப்படும் போன்ற முக்கிய அறிவிப்புகளும் ஆளுநர் உரையில் இடம்பெற்றன.