இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி. மகேந்திரன், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தன்னை இணைத்துக் கொண்டார். சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் அவர் உறுப்பினராக இணைந்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளராக பணியாற்றிய அனுபவம் கொண்ட சி. மகேந்திரன், கடந்த 2015-ஆம் ஆண்டு ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் அவர் டெபாசிட் இழந்தார்.
தவெகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சி. மகேந்திரன், 'இந்தத் தேர்தலில் தவெக சாதியை தோற்கடித்து காட்டியுள்ளது. ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை விஜய் மக்களிடையே உருவாக்கியுள்ளார். அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் நான் தவெகவில் இணைந்துள்ளேன்' என்று கூறினார்.
மேலும் அவர், 'சாதி தோற்கடிக்கப்பட்டிருப்பதை அரசியலில் வியப்புடன் பார்க்கிறேன். சாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற அனைத்து பாகுபாடுகளையும் தவெகவின் தேர்தல் வெற்றி உடைத்தெறிந்துள்ளது. சிவப்பு துண்டோடு தவெகவில் தொடர்ந்து செயல்பட விரும்புகிறேன். தவெகவின் வெற்றி சாதியை ஒழித்துள்ளது' என்றும் தெரிவித்தார்.