1980-ல் எழுப்பப்பட்ட கோரிக்கையை 40 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு பாட்டாளி மக்கள் கட்சி சாதித்துள்ளதாக இயக்குநர் தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரிட்டிஷார் ஆட்சிக்காலத்தில் 1931-ல் எடுக்கப்பட்ட சமூக நீதி கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டே தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு கொள்கை இதுவரை பின்பற்றப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழ்நாட்டை ஆண்டவர்கள் சமூக நீதி பற்றிப் பேசியதோடு, அதற்காகப் போராடிய தலைவர்களின் படங்களையும் பயன்படுத்திக் கொண்டனரே தவிர, உண்மையான சமூக நீதியை வழங்கவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
ஆனால், தமிழ்நாட்டில் அமைந்துள்ள புதிய அரசு, பொறுப்பேற்ற ஒரே மாதத்தில், தமிழ்நாடு சட்டமன்ற ஆளுநர் உரையில் சமூக நீதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தி என்றும், இதன் மூலம் உண்மையான சமூக நீதியை இனி பெறப்போவதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடிக்கப்படும் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசும் இந்த ஆண்டு இறுதிக்குள் சமூக நீதி கணக்கெடுப்பை நடத்தி முடிக்கும் என அறிவித்துள்ளது. உண்மையான சமூக நீதிக்கு மீண்டும் வித்திட்ட தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மிகுந்த பாராட்டுக்குரியவர் என்றும் இயக்குநர் தங்கர் பச்சான் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.