எத்தனால் கலந்த பெட்ரோல் எறும்புகளை ஈர்க்கும் என சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளுக்கு பாரத் பெட்ரோலியம் நிறுவனம் (BPCL) முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக எத்தனால் கலந்த எரிபொருள் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் காரணமாக, வாகன தயாரிப்பு நிறுவனங்களும் எத்தனால் கலந்த வாகன உற்பத்தியில் ஆர்வம் காட்டி வருகின்றன. சமீபத்தில் 85 சதவீதம் எத்தனால் கலந்த எரிபொருள் அறிமுகம் செய்யப்பட்டது, இது வழக்கமான பெட்ரோலை விட லிட்டருக்கு 20 ரூபாய் விலை குறைவாக உள்ளது. இதனால் எத்தனால் கலந்த எரிபொருளுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், எத்தனால் கலந்த எரிபொருள் பயன்படுத்தும் வாகனங்களில் எறும்புகள் மொய்ப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின. இந்த வீடியோக்கள் முற்றிலும் போலியானவை என பாரத் பெட்ரோலியம் நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பெட்ரோலுடன் கலக்கப் பயன்படுத்தப்படும் எரிபொருள் தர எத்தனால், நொதித்தல் மற்றும் காய்ச்சி வடித்தல் செயல்முறைகள் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்த செயல்முறைகளின் போது சர்க்கரைச் சத்துக்கள் முழுமையாக நீக்கப்படுகின்றன.
மேலும், இந்த எரிபொருள் எத்தனாலில் பூச்சிகளை விரட்டும் தன்மை கொண்ட மூலக்கூறுகள் சேர்க்கப்பட்டுள்ளன. பெட்ரோலுடன் எத்தனாலைக் கலந்த பிறகும், பெட்ரோலின் ஹைட்ரோகார்பன் வாசனைதான் மிகத் தீவிரமாக இருக்கும். பெட்ரோலுடன் ஒப்பிடும்போது, எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலில் இருந்து மிகக் குறைந்த அளவிலேயே எரிபொருள் நீராவியாகிறது. இதனால், எறும்புகளையோ அல்லது பிற பூச்சிகளையோ வாகனத்தின் எரிபொருள் மூடிகளுக்கு அருகே ஈர்க்கக்கூடிய எந்தவொரு காரணியும் அந்த எரிபொருளில் இல்லை.
சமூக ஊடகங்களில் பரப்பப்படும் இந்தத் தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், எத்தனால் கலந்த எரிபொருள் எறும்புகளை ஈர்க்கும் என்பது பொய் என்றும், அடிப்படை ஆதாரமற்றது என்றும், அத்தகைய படங்கள் மற்றும் பதிவுகள் போலியானவை என்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தனது அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.