தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தேர்தல் வாக்குறுதியாக பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார். இந்த வாக்குறுதியை நம்பி பல லட்சக்கணக்கான பெண்கள் தவெகவிற்கு வாக்களித்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்திற்கும் மேலாகியும், இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தவெக அரசு தோல்வியடைந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக அரசு வழங்கி வந்த ரூ.1,000 உரிமைத்தொகை கூட தாமதமாக வழங்கப்பட்டதாகவும், ஜூன் மாதத்திலும் அதே தொகை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தேர்தல் நேரத்தில் முழங்கிய ரூ.2,500 வாக்குறுதி என்ன ஆனது என்றும், பெண்களின் வாக்குகளைப் பெற மட்டுமே இந்த வெற்று வாக்குறுதி வழங்கப்பட்டதா என்றும் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 வழங்கப்படும் என அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி, அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால், தமிழகத்தில் வாக்குறுதியை பற்றி கேள்வி எழுப்பினால், கடன் சுமையை காரணம் காட்டி முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் விளக்கம் அளிப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
தேர்தலுக்கு முன்பே அரசின் நிதிநிலை அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் என்றும், அப்படியிருக்க நடைமுறையில் சாத்தியமில்லாத வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றியது ஏன் என்றும் எல்.முருகன் கேள்வி எழுப்பினார். ஒரு அரசின் திறமை என்பது தேர்தல் மேடைகளில் வசனம் பேசுவதில் இல்லை, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும், திறமையான நிர்வாகத்தை வழங்குவதிலும்தான் உள்ளது என்றும் அவர் கூறினார். தற்போதைய தவெக அரசு நிர்வாக அனுபவமின்மையால் திணறுகிறது என்றும், சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதைப்பொருள் நடமாட்டம் போன்ற பிரச்சினைகள் தொடர்வதாகவும், இவற்றைக் கட்டுப்படுத்துவதில் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் காலத்தில் உணர்வுபூர்வமான பேச்சுகளால் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், இன்று மக்களின் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை, மக்கள் நலன் ஆகியவை வெறும் தேர்தல் முழக்கங்களாக மட்டுமே இருந்தனவா என்பதற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும். எனவே, பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை தவெக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், இது மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த மிகப்பெரிய தேர்தல் மோசடி என்ற குற்றச்சாட்டிலிருந்து தப்ப முடியாது என்றும் எல்.முருகன் எச்சரித்தார். தமிழக மக்கள், குறிப்பாக பெண்கள் தாங்கள் அளித்த நம்பிக்கைக்கு உரிய பதிலை முதல்-அமைச்சரிடம் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.