தமிழ்நாட்டின் உயர்கல்வி வளர்ச்சிக்கு முதுகெலும்பாக விளங்கும் மாநிலப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் நீண்டகாலமாக காலியாக இருப்பது மிகுந்த கவலை அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 22 மாநிலப் பல்கலைக்கழகங்களில் 16 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாத நிலை, உயர்கல்வித் துறையின் செயல்பாடுகளையே முடக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட முக்கிய பல்கலைக்கழகங்களும், மருத்துவம், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம், தமிழியல் கல்விக்கான சிறப்புப் பல்கலைக்கழகங்களும் நிரந்தர துணைவேந்தர் இன்றி இயங்கி வருகின்றன. இதனால், பல்கலைக்கழகங்களின் செனட் மற்றும் சிண்டிகேட் கூட்டங்கள் முறையாக நடைபெறாமல், புதிய பாடத்திட்டங்கள், தொழில்நுட்ப மேம்பாடுகள், ஆராய்ச்சி நிதி பெறுதல், புதிய கல்வித் திட்டங்களுக்கு ஒப்புதல் போன்ற முக்கிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், NIRF மற்றும் NAAC போன்ற தேசிய தரவரிசை அமைப்புகளில் தமிழகப் பல்கலைக்கழகங்களின் நிலை பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக துணைவேந்தர் நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையே நிலவி வரும் கருத்து வேறுபாடுகளால் உயர்கல்வித் துறை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்த நிலை மாணவர்களின், ஆராய்ச்சியாளர்களின், கல்வியாளர்களின் எதிர்கால நலனுக்கு எதிரானது என ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, உயர்கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, காலியாக உள்ள அனைத்து துணைவேந்தர் பணியிடங்களையும் நிரப்ப தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக உயர்கல்வித்துறை அமைச்சர் நேரடியாக ஆளுநருடன் கலந்தாலோசித்து, தேடல் குழுக்கள் அமைப்பது மற்றும் நியமன நடைமுறைகளை விரைவுபடுத்துவது தொடர்பாக சுமுகமான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். உயர்கல்வி என்பது அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது என்றும், மாணவர்களின் கல்வி நலன், பல்கலைக்கழக வளர்ச்சி, தமிழகத்தின் அறிவுசார் முன்னேற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, துணைவேந்தர் நியமனங்களை இனியும் தாமதப்படுத்தாமல் உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசும், ஆளுநரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.