சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ-க்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் இன்று (ஜூன் 16) சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இந்த பயிற்சி முகாமை தமிழக முதல்வர் விஜய் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மக்கள் பிரதிநிதிகளாக சட்டமன்றத்திற்குள் நுழைந்துள்ள புதிய முகங்களுக்கு, மக்கள் பிரச்சினைகளை சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமாகப் பிரதிபலிப்பது மற்றும் அவையின் மாண்பைக் காப்பது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த முகாமின் முக்கிய நோக்கமாகும்.
இன்றும் நாளையும் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்புகளில், மூத்த அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றச் செயலகத்தின் முன்னாள் அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். அவையில் கேள்விகளை எழுப்பும் முறைகள், கவன ஈர்ப்புத் தீர்மானங்கள், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களில் பங்கேற்பதற்கான விதிகள், சட்டமன்றப் பேரவையில் உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிமுறைகள் மற்றும் அவை மரபுகள், அரசுத் திட்டங்களை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குக் கொண்டு சேர்ப்பதிலும், தொகுதி மேம்பாட்டு நிதியைச் சரியாகப் பயன்படுத்துவதிலும் சட்டமன்ற உறுப்பினர்களின் பங்கு ஆகியவை குறித்து எம்எல்ஏ-க்களுக்குப் பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன.
முகாமைத் தொடங்கி வைத்து உரையாற்றிய முதல்வர் விஜய், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கடமைகளை உணர்ந்து, விவாதங்களில் அர்த்தமுள்ள வகையில் பங்கெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சட்டப்பேரவையின் மாண்பைக் காப்பதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடின்றி அனைத்து உறுப்பினர்களுக்கும் சமமான பொறுப்பு உள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த பயிற்சி முகாம், புதிதாக சட்டமன்ற உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றுள்ளவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டுதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்களது தொகுதி மக்களின் தேவைகளைச் சட்டமன்றத்தில் திறம்பட எடுத்துரைக்கவும், அரசின் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தவும் இந்த பயிற்சி உதவும்.