தம்புள்ளையில் நடைபெற்ற இந்தியா ஏ மற்றும் இலங்கை ஏ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடரின் 4வது லீக் ஆட்டம், கடைசி பந்து வரை நீடித்த விறுவிறுப்பான போட்டியாக அமைந்தது. நடுவர்களின் சர்ச்சை முடிவுகள் மற்றும் கடைசி ஓவர் திருப்பங்கள் என அனல் பறந்த இந்தப் போட்டி இறுதியில் சூப்பர் ஓவருக்குச் சென்று இலங்கை ஏ அணியின் வெற்றியுடன் முடிந்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய ஏ அணிக்கு ஆரம்பம் முதலே சரிவு ஏற்பட்டது. பிரப்சிம்ரன் சிங், வைபவ் சூர்யவன்ஷி, கேப்டன் திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் 143 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தவித்த இந்திய அணியை, சூர்யான்ஷ் ஷெட்ஜ் (72 ரன்கள்) மற்றும் விப்ராஜ் நிகாம் (51 ரன்கள்) ஆகியோரின் சதமடித்த பார்ட்னர்ஷிப் மீட்டெடுத்தது. இறுதியில் இந்திய அணி 49.2 ஓவர்களில் 265 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய வீரர் விப்ரஜ் நிகாம் பிட்ச்சில் நடந்ததாகக் கூறிய சம்பவத்திற்காக நடுவர்கள் இலங்கை அணிக்கு 10 ரன்கள் இலவசமாக வழங்கினர்.
266 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை ஏ அணிக்கு, தொடக்க வீரர் நிரோஷன் டிக்வெல்லா 37 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் அளித்தார். சதத்தை நோக்கி விளையாடிய சதீரா சமரவிக்ரம 93 ரன்கள் குவித்து இந்திய அணியை மிரட்டினார். சாமிகா குணசேகராவும் 18 ரன்கள் சேர்த்து சிறப்பான பங்களிப்பை அளித்தார். ஆட்டத்தின் இறுதி ஓவரில் இலங்கை வெற்றிக்கு 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷத் கான் பந்துவீசினார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பேட்ஸ்மேன் சாமிகா குணசேகராவின் பேடில் பந்து பட்டு விக்கெட் கீப்பருக்கு பின்னால் உருண்டது. பேட்ஸ்மேன்கள் 1 ரன் ஓடி முடித்த நிலையில், 2வது ரன்னுக்கு ஓடிய குணசேகராவை ரன் அவுட் செய்தார் அர்ஷத் கான். ஆனால், பேட்ஸ்மேன் பந்தை அடிக்க முயற்சி செய்யாததால், முதல் ரன்னை லெக் பைஸ் விதியாக கணக்கில் எடுக்கக் கூடாது என இந்திய வீரர்கள் வாக்குவாதம் செய்தனர். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, நடுவர்கள் முதல் ரன்னை கணக்கில் எடுத்துக்கொண்டதால், போட்டி 265 ரன்களுடன் டையில் முடிந்தது.
இதையடுத்து, வெற்றியாளரைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. சூப்பர் ஓவரில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 18 ரன்கள் குவித்தது. பின்னர் 19 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய இந்திய அணி, சூர்யான்ஷ் ஷெட்கே மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் பேட்டிங் செய்தனர். இந்திய அணியால் 10 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. வைபவ் அடித்த ஒரே ஒரு ஃபோர் மட்டுமே அந்த சூப்பர் ஓவரில் இந்திய அணியின் பவுண்டரியாக அமைந்தது. இறுதியில், இந்த விறுவிறுப்பான போட்டியில் இலங்கை ஏ அணி சூப்பர் ஓவர் மூலம் வெற்றி பெற்றது.