இலங்கை ஏ அணிக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் பரபரப்பான போட்டியில், இந்திய ஏ அணி சூப்பர் ஓவரில் தோல்வியடைந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி சூப்பர் ஓவரில் முதல் பந்தை எதிர்கொள்ள வராதது ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
போட்டியின் இறுதிக்கட்டத்தில், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் குகதாஸ் மதுலன் வீசிய ஓவரில் இந்திய அணிக்கு வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டன. ஆனால், மதுலன் சிறப்பாக பந்துவீசி இந்திய அணியை 9 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இலங்கை அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். ஆட்டத்தின் முடிவில் வைபவ் சூர்யவன்ஷிக்கும் இலங்கை வீரர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சூப்பர் ஓவரில், இந்திய அணியின் சூர்யான்ஷ் ஷெட்கே முதலில் பேட்டிங் செய்தார். அவர் முதல் மூன்று பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். வைபவ் சூர்யவன்ஷி முதல் பந்தை எதிர்கொள்ளாதது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. அவர் முதல் பந்திலிருந்தே விளையாடியிருந்தால், ஆறு பந்துகளில் மூன்று சிக்ஸர்களை அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றிருக்கலாம் என ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.
முன்னதாக, இலங்கை அணியின் சதீர சமரவிக்ரம 91 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். கடைசி ஓவரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷத் கான் சிறப்பாக பந்துவீசி, 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் வெறும் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து போட்டியை டை செய்தார். போட்டி டை ஆனதால், முடிவை அறிவிப்பதில் குழப்பம் நீடித்தது. பின்னர் இந்திய ஏ அணி கேப்டன் திலக் வர்மா நடுவர்களிடம் பேசி சூப்பர் ஓவர் நடத்த வலியுறுத்தினார். சூப்பர் ஓவரில் அர்ஷத் கான் 16 ரன்களை விட்டுக் கொடுத்தாலும், இந்திய அணியால் 9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
முன்னதாக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், வைபவ் சூர்யவன்ஷி 14 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். திலக் வர்மா (23) மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் (32) ஜோடி 52 ரன்கள் சேர்த்தாலும், மிடில் ஆர்டரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 143 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஜோடி சேர்ந்த சூர்யான்ஷ் ஷெட்கே (66 பந்துகளில் 72) மற்றும் விப்ராஜ் நிகாம் (49 பந்துகளில் 51) ஆகியோர் சிறப்பான அரைசதங்களை விளாசி அணியை மீட்டனர். இவர்கள் இருவரும் 8-வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் ஜோடி சேர்த்து இந்திய அணி 265 ரன்களை எட்ட உதவினர்.
இந்த தோல்வி, ஆப்கானிஸ்தான் ஏ அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, இத்தொடரில் இந்திய ஏ அணி சந்திக்கும் இரண்டாவது தோல்வியாகும். இலங்கை ஏ அணி முந்தைய ஆட்டத்தின் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு இந்த ஆட்டத்தில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.