தமிழகத்தில் குற்றவாளிகளைப் பிடிப்பது ஒருபுறம் இருக்க, குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு என்ன திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்று தமிழக அரசுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவமும், காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவமும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த இரு சம்பவங்களிலும் வடமாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் நடக்கும் குற்றச் சம்பவங்களில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பு இருப்பது அதிகரித்து வருவதாக அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த ஜூன் மாதத்திலேயே சென்னையில் சங்கிலி பறிக்க முயன்ற வடமாநில இளைஞர் கைது, தாம்பரம் அருகே இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லை, திருவள்ளூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல், வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை, வேளச்சேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 15 வயது சிறுவன் உட்பட மூன்று வடமாநில தொழிலாளர்கள் கைது, மதுரவாயல் பகுதியில் பெண்ணிடம் பாலியல் சீண்டல் என தொடர்ச்சியாக பல சம்பவங்களில் வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யும் காவல்துறையின் நடவடிக்கையைப் பாராட்டினாலும், குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான தமிழக அரசின் நடவடிக்கைகள் என்ன என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் குறித்த சரியான விவரங்கள் ஒப்பந்ததாரர்களிடமோ அல்லது நிறுவன உரிமையாளர்களிடமோ உள்ளதா என்றும், அந்த விவரங்கள் தமிழக அரசிடம் வழங்கப்படுகிறதா என்றும் அவர் கேட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்த முழு விவரங்களையும் அரசுக்கு வழங்க வேண்டும் என்றும், அதனை அரசு முறையாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.