தமிழக முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்றதில் இருந்து மாநிலத்தின் நிதி நிலைமை, மக்கள் நலத்திட்டங்கள், சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இந்த சூழலில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிக்க வரும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
முன்பு திமுக, அதிமுக ஆட்சிக்காலங்களில் மக்கள் நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு சென்று புகார் அளித்து வந்தனர். ஆனால் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, நேரடியாக புகார் அளிக்க வருவோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் தலைமை செயலகத்தில் தினமும் கூட்ட நெரிசல் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது பாதுகாப்பு மற்றும் நிர்வாக ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் கூறினர்.
இதனைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிக்க வரும் பொதுமக்கள், தங்கள் மனுக்களை தலைமை செயலகத்தின் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் தலைமை செயலகத்திற்குள் வரும் கூட்டத்தைக் குறைக்கவும், நிர்வாகத்தை எளிதாக்கவும் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, தலைமை செயலகத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த முதலமைச்சரின் தனிப்பிரிவு புகார் பெட்டி அகற்றப்பட்டுள்ளது. இனி பொதுமக்கள் தலைமை செயலகத்திற்குள் சென்று நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் மனுக்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் அனுமதி இல்லை என்ற புதிய நடைமுறை திரும்பப் பெறப்பட்டு, முன்பு இருந்த பழைய நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.