தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில், கட்சியை விட்டு விலகிச் சென்ற முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவைக் கண்டித்து நிர்வாகிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, சிதம்பராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் ஆரம்பத்தில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி, பின்னர் அதிமுகவில் முழுநேர அரசியல்வாதியாக இணைந்தார். 2011, 2016 சட்டமன்றத் தேர்தல்களில் கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016-ல் செய்தி மக்கள் தொடர்பு மற்றும் விளம்பரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். 2021 தேர்தலிலும் எம்.எல்.ஏ. ஆன இவர், அண்மையில் தவெகவில் இணைந்தார்.
இந்நிலையில், கோவில்பட்டியில் இன்று நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில், கடம்பூர் ராஜூவின் பெயர் குறிப்பிடப்படாமலேயே, அவர் விலகிச் சென்றது குறித்து சில நிர்வாகிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு தரப்பு நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மூத்த நிர்வாகிகள் தலையிட்டு, கட்சியை விட்டு சென்றவர்களைப் பற்றி பேச வேண்டாம் என அறிவுறுத்தியும் வாக்குவாதம் ஓயவில்லை.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய போலீசார், இரு தரப்பு நிர்வாகிகளையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். கட்சி மாறிய பிறகும் கடம்பூர் ராஜூ தொடர்பான சர்ச்சை தொடர்வது கோவில்பட்டியில் அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.