நீலகிரி மாவட்டம் பந்தலூரில், குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை அவரது கணவன் காரில் வைத்து கொடூரமாக தாக்கி கால்களை வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த மனைவி, மீண்டும் கணவருடன் குடும்பம் நடத்த வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை காரில் ஏற்றிச் சென்றுள்ளார். காரின் உள்ளே வைத்து, மனைவியின் முகத்தில் மிளகாய் தூளை வீசி, பின்னர் கூரிய ஆயுதத்தால் அவரது கால்களை வெட்டியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கொடூர தாக்குதலுக்குப் பிறகு, கணவன் அங்கிருந்து தப்பியோடிவிட்டான். காயமடைந்த மனைவி உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பந்தலூர் காவல்துறையினர், தலைமறைவாக இருந்த கணவனை தீவிர விசாரணைக்கு பிறகு கைது செய்தனர்.
குடும்ப தகராறில் இவ்வளவு கொடூரமான தாக்குதல் நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது போன்ற வன்முறை சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.