பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையில் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு பெட்ரோல் பங்குகளில் மொத்தமாக டீசல், பெட்ரோல் விற்பனை செய்வதற்கு 90 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பெட்ரோல் பங்குகளில் ஒரு வாகனத்திற்கு நாளொன்றுக்கு அதிகபட்சமாக 200 லிட்டர் டீசல் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அறிவிப்பின்படி, தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான பெட்ரோல், டீசலை தங்கள் ஆலைகளுக்குள் உள்ள பெட்ரோல் விற்பனை மையங்களில் இருந்து மொத்தமாகப் பெற வேண்டும். இந்த நடவடிக்கை மூலம், மொத்தமாக வாங்கப்படும் பெட்ரோல், டீசல் சாதாரண வாகன ஓட்டிகளுக்குக் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம், உள்ளூர் சந்தையில் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க முடியும்.
வாகனங்களில் நிரப்பப்படும் டீசல், வாகன டேங்கர் அல்லது பெசோ (PESO) அங்கீகாரம் பெற்ற கண்டெய்னர்களில் மட்டுமே நிரப்பப்பட வேண்டும். மேலும், வாகன ஓட்டிகள் மறுவிற்பனை செய்வதற்காக டீசலை வாங்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் 90 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்றும், தேவைப்பட்டால் மத்திய அரசு புதிய அறிவிப்பு மூலம் இதை மேலும் நீட்டிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை மத்திய மற்றும் மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும். மேலும், பெட்ரோல், டீசல் பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இன்றி பெட்ரோல், டீசல் சமமாக கிடைப்பதை உறுதி செய்வதே இந்த அறிவிப்பின் முக்கிய நோக்கம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.