தமிழக முதல்வர் விஜய், மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளதை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வரவேற்றுள்ளார். இருப்பினும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதால், முதல்வர் விஜய் ஏமாந்து விடக்கூடாது என அவர் எச்சரித்துள்ளார்.
கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், 'திராவிட மாடல் அரசு மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்ததால் தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் தடைபட்டன. தற்போது முதல்வர் விஜய், எம்.ஜி.ஆர். பாணியில் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவோம் என கூறியதை வரவேற்கிறோம். ஆனால், நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் அரைத்த மாவையே அரைத்துள்ளார். நீட் விலக்கு குறித்து நிதி ஆயோக் கூட்டத்தில் கேட்க முடியாது, சுப்ரீம் கோர்ட்டில் தான் கேட்க வேண்டும்' என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், 'பிரசாத ஸ்டால் விவகாரத்தில் அறநிலையத்துறை அமைச்சரின் செயல் பாராட்டத்தக்கது. இதில் சுமார் இரண்டு லட்சம் பேரின் வாழ்வாதாரம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் உள்ளது. காவிரி பிரச்னைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம். எனவே, சோனியா காந்தி, கர்நாடக முதல்வர் சிவகுமார் ஆகியோர் விரோத போக்கை கடைபிடிக்கிறார்கள். பிரதமர் மோடி காவிரி விவகாரத்தில் அரசியல் செய்யவில்லை. வாஜ்பாய் ஆட்சி காலத்தில் காவிரி ஆணையம் அமைக்கப்பட்டது. அணைக்கட்ட மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். கர்நாடக முதல்வர் இதை அரசியலாக மாற்றி, இந்திய ஒருமைப்பாட்டுக்கு சவால் விடும் வகையில் நடந்துக்கொள்கிறார்' என்றும் குற்றம் சாட்டினார்.
'தமிழக நலன்களுக்கு எதிரான காவிரி, இலங்கை தமிழர் பிரச்னை போன்ற விவகாரங்களில் காங்கிரஸ் கட்சி இருந்தது. திமுக முதுகில் காங்கிரஸ் குத்தும். எப்போதும் முதுகில் குத்தும் கட்சி காங்கிரஸ். எனவே, முதல்வர் விஜய் ஏமாந்து விடக்கூடாது. திமுக தமிழக வெற்றிக்கழகம் காங்கிரஸ் கட்சியினரால் வஞ்சிக்கப்பட்டு விடக்கூடாது. மேகதாது விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினரிடம் ஏமாறாமல் முதல்வர் விஜய் செயல்பட வேண்டும். விஜய் அரசு நல்லது செய்ய முயற்சிக்கிறது. ஆறு மாதம் வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஆனாலும், திராவிட மாடல் 2.0 போன்ற சில நடவடிக்கைகள் உள்ளது. 2028 மகாமக திருவிழாவுக்கான பணிகளை இப்போதே தொடங்க வேண்டும். பிரதமர் மோடி இந்த தேசிய திருவிழாவில் கலந்துகொள்ள வேண்டும்' என்றும் அர்ஜூன் சம்பத் கூறினார்.
