நடிகர் விஜயை 'இன்ஸ்டா அரசன் 24-ஆம் புலிகேசி' என்று திமுக கடுமையாக விமர்சித்துள்ளது. தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான நீராதார உரிமைகளை மீட்டெடுப்பதாகக் கூறிய வாக்குறுதியை நிறைவேற்றாமல், விவசாயிகளின் நலனில் அக்கறை காட்டாமல் கர்நாடகாவுக்குச் சென்று சாமி கும்பிடுவதாக திமுக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில் குற்றம் சாட்டியுள்ளது.
'தெய்வங்களுக்கே உணவளிப்பவர்கள் நம் விவசாயிகள்' என்று விஜய் பேசிய வசனங்களைச் சுட்டிக்காட்டியுள்ள திமுக, "அந்த விவசாயிகள் விளைவிக்கத் தண்ணி குடுக்காம, தெய்வத்துக்கிட்ட போயி வேண்டி என்ன பயன்னு உங்க மங்குனி மண்டைக்கு உறைச்சதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், 'தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான நீராதார உரிமைகளை மீட்டெடுக்க தவெக என்றும் முன்னிற்கும்' என்ற விஜய்யின் வாக்குறுதியை நினைவுபடுத்தி, அதை நிறைவேற்றாமல் 'டெல்டா விவசாயிகள் காதுல டால்டா' ஊற்றிவிட்டு கர்நாடகாவுக்குச் செல்வது கூச்சமில்லையா என்றும் திமுக விமர்சித்துள்ளது.
விவசாயத்தைப் பற்றி தனக்கு ஆழமாகத் தெரியாது என விஜய் ஒப்புக்கொண்டதையும் திமுக சுட்டிக்காட்டியுள்ளது. படத்திற்காக விவசாயிகளின் உணர்ச்சிகளைப் பயன்படுத்திவிட்டு, நிஜத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு கர்நாடகாவுக்குச் செல்வது கண்டிக்கத்தக்கது என்றும் திமுக கூறியுள்ளது. இதுகுறித்து, "பகுத்தறிவுப் பகலவன்கள் வாழ்ந்து சீர்திருத்திய தமிழ்நாட்டு மண்ணுக்கு வந்து சேர்ந்த மிகப்பெரிய சாபக்கேடு இந்த 'இன்ஸ்டா அரசன் 24-ஆம் புலிகேசி'!" என திமுக சாடியுள்ளது.
தந்தை பெரியாரே விஜய்யின் செயல்களைப் பார்த்து கடுப்பாகி, 'Don't make me come down there, you punk!' எனத் தன் கைத்தடியால் மண்டை மேலேயே போட்டிருப்பார் என்றும் திமுக தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது. மேலும், 41 உயிர்கள் பறிபோன விவகாரத்திலும் விஜய்யிடமிருந்து இன்னும் பதில் வரவில்லை என்றும் திமுக சுட்டிக்காட்டியுள்ளது.
