இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரில் இந்தியா ஏ அணிக்காக விளையாடி வரும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் திறமையை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வெகுவாகப் பாராட்டியுள்ளார். இவர் டி20 போட்டிகளில் மட்டுமல்லாமல், 50 ஓவர் கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்படுவார் என மஞ்ச்ரேக்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பி வென்றதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த வைபவ், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்தார். 2024-25 விஜய் ஹசாரே தொடரில் அறிமுகமான இந்த 15 வயது வீரர், இதுவரை எட்டு லிஸ்ட்-ஏ போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இத்தகைய இளம் வயதிலேயே வைபவ் சூர்யவன்ஷியின் மனநிலை மற்றும் சூழலுக்கு ஏற்ப விளையாடும் திறமையைக் கண்டு வியந்த மஞ்ச்ரேக்கர், அவர் நீண்ட காலம் கிரிக்கெட்டில் நீடிப்பார் என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் பேசிய மஞ்ச்ரேக்கர், 'வைபவ் சூர்யவன்ஷியை நான் மிக அருகில் கவனித்து வருகிறேன். இதுவரை அவர் பெயர் எடுத்தது ஐபிஎல் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே. ஆனால், அது ஒரு வீரரை மதிப்பிடுவதற்கு சரியான சூழல் அல்ல. இது வெறும் ஏ தொடர் என்றாலும், இங்குள்ள ஆடுகளங்கள் ஐபிஎல்லில் இருப்பது போல ரன் குவிப்புக்கு சாதகமானது அல்ல. சூர்யவன்ஷியின் பேட்டிங்கில் நான் ஆழத்தைக் காண முடிந்தது. அவருடைய பேட்டிங்கைப் பார்த்த பிறகு எனக்கு உற்சாகமாக இருக்கிறது. அவர் வெறும் டி20 வீரர் என்று நினைத்தால், அது தவறு. அவர் தடுப்பாட்டத்தை நேர்த்தியாக விளையாடுவதையும், பந்தைச் சரியாகக் கணித்து டைமிங் செய்வதையும் நான் கண்டேன். சிறிய அளவிலான வாய்ப்புதான் என்றாலும், அவர் 50 ஓவர் போட்டியிலும் சிறந்து விளங்குவார் என்று நான் நினைக்கிறேன்' என்று குறிப்பிட்டார்.
இந்த முத்தரப்புத் தொடரில் இந்தியா ஏ அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அடுத்ததாக ஜூன் 15, திங்கட்கிழமை அன்று இலங்கை ஏ அணியை எதிர்கொள்கிறது. ஆப்கானிஸ்தான் ஏ அணிக்கு எதிரான போட்டியில், 22 பந்துகளில் 44 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடினார் வைபவ். இம்மாத இறுதியில் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் வைபவ் முதல் முறையாக இந்திய அணிக்கு அறிமுகமாக உள்ளார்.