தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, அமைச்சர் ரமேஷ் நேற்று இரவு மதுரை வருகை தந்தார்.
மதுரை மேற்கு கோபுரப் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கிய அமைச்சர், இன்று காலை கோவில் அதிகாரிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் இணைந்து குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். மத்திய தொகுதி எம்.எல்.ஏ. முஸ்தபா ஆதரவாளர்கள் அவருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினர்.
கோவிலின் நான்கு கோபுரங்கள் மற்றும் பிற பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர், கிழக்கு கோபுரத்திற்கு அருகில் இருந்த மாநகராட்சி தண்ணீர் தொட்டி பயனற்ற நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டினார். மேலும், பக்தர்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரத்தை ஆய்வு செய்தபோது, அது தரமற்றதாக இருந்ததால், மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக தரமான தண்ணீர் நிரப்ப பணிகளை மேற்கொள்ளுமாறு கோவில் இணை ஆணையரிடம் உத்தரவிட்டார்.
பிரசாதம் தயாரிக்கும் இடம் மற்றும் புத்தக விற்பனை நிலையத்தையும் ஆய்வு செய்த அமைச்சர், புத்தக விற்பனை குறித்த சரியான பதில் கிடைக்காததால் அதிகாரிகளை கடுமையாக கண்டித்தார். கணினியில் முறையாக பதிவு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார். இறுதியாக, பக்தர்களுடன் வரிசையில் நின்று அம்மன் தரிசனம் செய்த அமைச்சர், காலணி பாதுகாப்பு அறையில் டோக்கன் தொலைந்து போனது குறித்து கேட்டறிந்து, மாற்று ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தினார். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆய்வின் போது, அமைச்சரின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர்.
