மும்பையைச் சேர்ந்த பயணி ஒருவர், பாலி பயணத்திற்காக இந்திகோ விமான நிறுவனத்தில் ரூ.1 லட்சத்து 2,928 செலுத்திய நிலையில், விமானம் ரத்து செய்யப்பட்டதால், பணத்தைத் திரும்பக் கேட்டபோது ரூ.40,000 பிடித்தம் செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் சமூக வலைதளங்களில் இந்திகோ விமான நிறுவனம் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
பயணி ஒருவர் தனது பாலி பயணத்திற்காக இந்திகோ விமான டிக்கெட்டுகளுக்கு ரூ.1,02,928 செலுத்தியுள்ளார். ஆனால், திட்டமிடப்பட்ட விமானம் ரத்து செய்யப்பட்டதோடு, 18 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட இடைநிறுத்தம் ஏற்பட்டதால், பயணத்தை ரத்து செய்து பணத்தைத் திரும்பக் கோரியுள்ளார். இருப்பினும், இந்திகோ நிறுவனம் முழுப் பணத்தையும் திருப்பித் தராமல், ரூ.40,000 பிடித்தம் செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, பயணச் சீட்டு முன்பதிவு தளமான மேக் மை ட்ரிப் மற்றும் இந்திகோ விமான நிறுவனம் இடையே ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர் சேவை மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து சமூக வலைதளங்களில் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விமான ரத்து மற்றும் நீண்ட தாமதத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முழு பணத்தைத் திரும்ப வழங்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்திகோ நிறுவனம் இதுகுறித்து உரிய விளக்கத்தை அளிக்குமா அல்லது பயணிகளுக்கு நீதி கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.