2027 ஐசிசி ஆடவர் ஒருநாள் போட்டி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கி நவம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறும் என தற்காலிக தேதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இந்த தொடருக்கான தற்காலிக தேதிகள் ஐசிசி கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளன. ஜூலை மாதம் எடின்பர்க்கில் நடைபெறவுள்ள ஐசிசி ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இறுதி ஒப்புதல் எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிரிக்க மண்ணில் 2003ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெறும் முதல் ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இதுவாகும்.
இத்தொடரில் மொத்தம் 54 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் பெரும்பான்மையான போட்டிகளை தென்னாப்பிரிக்கா நடத்தவுள்ளது. தென்னாப்பிரிக்காவில் 8 மைதானங்களில் குறைந்தது 41 போட்டிகள், ஜிம்பாப்வேயில் ஹராரே உள்ளிட்ட 3 மைதானங்களில் 8 முதல் 10 போட்டிகள், நமீபியாவில் 3 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜிம்பாப்வேயில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஃபாலே மோசி-ஓவா-துன்யா சர்வதேச கிரிக்கெட் மைதானம் உலகக் கோப்பை போட்டிகளை நடத்த தயாராகி வருகிறது.
கடந்த இரண்டு உலகக் கோப்பை தொடர்களில் 10 அணிகள் மட்டுமே பங்கேற்ற நிலையில், 2027 உலகக் கோப்பையில் மீண்டும் 14 அணிகள் பங்கேற்கும் பழைய முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த 14 அணிகளும் தலா 7 அணிகள் கொண்ட இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். லீக் சுற்றுகளின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெறும். முழு உறுப்பினர் அந்தஸ்து கொண்ட நாடுகள் என்பதால் தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் உலகக் கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. ஆனால், தொடரை நடத்தும் மற்றொரு நாடான நமீபியா தகுதிச் சுற்று போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றால் மட்டுமே உலகக் கோப்பைக்குள் நுழைய முடியும்.