தர்மசாலா: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 3,000 ரன்கள் கடந்த உலகின் 2வது வீரர் என்ற வரலாற்று சாதனையை படைக்க காத்திருக்கிறார். இந்த தொடர் சனிக்கிழமை (ஜூன் 13) தர்மசாலாவில் தொடங்குகிறது.
தற்போது வரை 61 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சுப்மன் கில் 2,953 ரன்கள் எடுத்துள்ளார். இன்னும் 43 ரன்கள் எடுத்தால் அவர் 3,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவார். இதன் மூலம், மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் 3,000 ரன்களை கடந்த 2வது வீரர் என்ற உலக சாதனையை படைப்பதுடன், அதிவேகமாக இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெறுவார்.
தற்போது தென்னாப்பிரிக்காவின் ஹாஷிம் அம்லா 57 இன்னிங்ஸ்களில் 3,000 ரன்களை கடந்து முதலிடத்தில் உள்ளார். சுப்மன் கில் தனது 62வது இன்னிங்ஸில் இந்த ரன்களை எட்டும்பட்சத்தில், ஷாய் ஹோப், பகார் ஜமான் போன்ற வீரர்களின் சாதனையை முறியடித்து 2வது இடத்திற்கு முன்னேறுவார். இந்திய அளவில் ஷிகர் தவான் 72 இன்னிங்ஸ்களில் 3,000 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். சுப்மன் கில் 62 இன்னிங்ஸ்களிலேயே இந்த சாதனையை முறியடிக்க உள்ளார்.
மேலும், இதே போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மாவும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸை முறியடித்து புதிய உயரத்தை எட்டுவார். ரோஹித் சர்மா தற்போது 282 ஒருநாள் போட்டிகளில் 11,577 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
