இலங்கை தம்புள்ளாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2வது போட்டியில், ஆப்கானிஸ்தான் ஏ அணிக்கு எதிராக விளையாடிய இந்திய ஏ அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அரைசதத்தை நெருங்கிய நிலையில், அலட்சியமாக விளையாடி விக்கெட்டை பறிகொடுத்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்த முத்தரப்பு தொடரில் இந்தியா ஏ, இலங்கை ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் பங்கேற்கின்றன. இதில் 2வது லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் ஏ அணியின் கேப்டன் இம்ரான் மிர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஐபிஎல் 2026 தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்ற 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. முதல் போட்டியில் வெறும் 14 ரன்கள் மட்டுமே எடுத்த அவர், இந்த போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். ஆரம்பம் முதலே தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யவன்ஷி, ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 22 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு மிகச் சிறந்த தொடக்கத்தை வழங்கினார். இதனால் இந்திய அணி 5 ஓவர்களிலேயே 50 ரன்களை கடந்து அசுர வேகத்தில் ரன் குவித்தது.
ஆட்டத்தின் 8வது ஓவரில் அப்துல்லா அகமத்ஸாய் வீசிய ஷார்ட் பந்தை ரன் எடுக்க முயன்று, லாவகமாக ராம்ப் ஷாட் ஆட முயன்றார் வைபவ் சூர்யவன்ஷி. ஆனால், பந்து அவரது பேட்டில் பட்டு எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் இஷாக் ரஹீமிடம் தஞ்சமடைந்தது. விக்கெட்டை இழந்தவுடன் சூர்யவன்ஷி ஏமாற்றத்தில் தலையைக் குனிந்தபடி, சில நொடிகள் மைதானத்திலேயே நம்ப முடியாமல் உறைந்து நின்றார். மிகவும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில், தேவையில்லாத ஷாட் மூலம் விக்கெட்டை பறிகொடுத்தது அவரது அனுபவமின்மையைக் காட்டியது. வைபவ் சூர்யவன்ஷி ஆட்டமிழந்த போது இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்திருந்தது. ஐபிஎல் தொடரில் அசத்திய வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச அரங்கிலும் பெரிய அளவில் முத்திரை பதிப்பார் என காத்திருந்த ரசிகர்களுக்கு, அவரது இந்த ஆட்டம் அதிரடியாக இருந்தாலும், பெரிய ஸ்கோராக மாறாதது சற்று ஏமாற்றமே.