2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் திட்டமிடலில் மூத்த வீரர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு இடையே ஒருங்கிணைப்பு குறைபாடு நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல மூத்த வீரர்களின் கடைசி உலகக்கோப்பையாக இது அமையக்கூடும் என்பதால், இந்திய அணி நிர்வாகம் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது.
முந்தைய உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, அதன் பிறகு ஒருநாள் போட்டிகளில் எதிர்பார்த்த ஆதிக்கத்தை செலுத்தவில்லை. பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் சாம்பியன்ஸ் டிராபி 2025-ஐ வென்றாலும், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் அடைந்த தோல்விகள் நிர்வாகத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. கேப்டனாக சுப்மன் கில் தனது முதல் ஒருநாள் தொடர் வெற்றிக்காக காத்திருக்கிறார். நியூசிலாந்துக்கு எதிரான சொந்த மண்ணில் நடந்த தொடரில் அவரது தலைமையிலான அணி தோல்வியைச் சந்தித்தது.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான ஒருநாள் அணி ஜூன் 6 அன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்போது டி20 அணிகள் மட்டுமே அறிவிக்கப்பட்டன. இது அணி நிர்வாகத்திற்கும் மூத்த வீரர்களுக்கும் இடையே தெளிவான புரிதல் தேவை என்பதை உணர்த்துகிறது. 2027 உலகக்கோப்பைக்கான திட்டமிடலில் தெளிவு பெற, சில மூத்த வீரர்கள் பிசிசிஐ அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அணியில் உள்ள சீனியர் வீரர்களைக் கையாளும்போது சுப்மன் கில் அதிகாரம் கொண்ட அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்றும், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருடன் இணைந்து தனது கேப்டன்ஷிப் பாணியை உருவாக்க வேண்டும் என்றும் பிசிசிஐ நிர்வாகி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார். அணியில் பெரிய வீரர்கள் இருக்கும்போது, டிரெஸ்ஸிங் ரூமில் கில் தனது கருத்துக்களை உறுதியாக முன்வைக்க வேண்டும். ஒருநாள் போட்டிகளுக்கான திட்டமிடலில் கம்பீர் அவ்வளவு தீவிரமாக ஈடுபடவில்லை என பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது. உலகக்கோப்பைக்கான தயாரிப்பில் கவனம் திரும்பியுள்ளதால், கம்பீரும் கில்லும் பொறுப்பேற்றுத் தங்கள் ஆலோசனைகளை அணியினரிடம் தெளிவுபடுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.