I.N.D.I.A. கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஆகஸ்ட் 8ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள Constitution Club of India-வில் நடைபெற்ற இண்டியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் 25 கட்சிகள் பங்கேற்றன. இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தேஜஸ்வி, உமர் அப்துல்லா, திருமாவளவன், சுப்ரியா சுலே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், எஸ்.ஐ.ஆர் வாக்கு திருட்டு மற்றும் தேர்தல் திருட்டு தொடர்பாக தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்ப ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் விவாதிக்கப்படும் என்றும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இண்டியா கூட்டணி கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கார்கே தெரிவித்தார்.
அரசின் தவறான கொள்கைகளை இண்டியா கூட்டணி மேலும் வலுவுடன் எதிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.