கரூர் மாநகராட்சி கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மாதாந்திர ஆலோசனைக் கூட்டத்தில், முதலமைச்சர் ஜோசப் விஜயின் புகைப்படத்துடன் முன்னாள் முதலமைச்சர்களான மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மற்றும் காமராஜர் ஆகியோரின் புகைப்படங்களையும் மாட்ட வேண்டும் என பல்வேறு கட்சி கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் மேயர் மற்றும் ஆணையர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மண்டல குழு தலைவர்கள் மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்களும் பங்கேற்றனர். அப்போது, கூட்டரங்கின் சுவரில் முதலமைச்சர் ஜோசப் விஜயின் புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. இதைக் கண்ட திமுக கவுன்சிலர் சக்திவேல், உடனடியாக எழுந்து சென்று முதலமைச்சர் விஜயின் புகைப்படத்திற்கு அருகே முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் புகைப்படத்தை மாட்டினார்.
இதனைத் தொடர்ந்து, அதிமுக கவுன்சிலர்கள் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை மாட்டப் போவதாகக் கூறி புகைப்படத்துடன் வந்துள்ளனர். அதேபோல், காங்கிரஸ் கவுன்சிலர்கள் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் புகைப்படத்தை மாட்ட வேண்டும் என வலியுறுத்தினர். இதனால், கூட்டரங்கில் சலசலப்பு ஏற்பட்டது.
தங்கள் தலைவர்களின் புகைப்படங்களையும் மாட்ட வேண்டும் என ஒவ்வொரு கட்சி கவுன்சிலர்களும் கோரிக்கை விடுத்ததால், மாநகராட்சி கூட்டரங்கில் பெரும் அமர்க்களம் நிலவியது. இந்த திடீர் வாக்குவாதத்தால் கூட்டம் சிறிது நேரம் தடைபட்டது.