இந்திய கிரிக்கெட்டில் 15 வயதில் சாதனை படைத்துள்ள இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மீது உடனடியாக அதிக எதிர்பார்ப்புகளை திணிக்க வேண்டாம் என முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ரசிகர்களுக்கும் நிபுணர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் நிலைபெற அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய 15 வயது வைபவ் சூர்யவன்ஷி, 237.30 ஸ்ட்ரைக் ரேட்டில் 776 ரன்கள் குவித்து அசத்தினார். இவரது அபார ஆட்டம் ராஜஸ்தான் அணியை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்றது. இவரது ஆட்டம் உலக அளவில் பிரபலமானது.
இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய டி20 அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த வாரம் தொடங்கும் அயர்லாந்து தொடரில் அவர் களமிறங்கினால், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து இந்திய அணிக்காக விளையாடும் மிக இளம் வீரர் என்ற சாதனையை படைப்பார்.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி இதுகுறித்து பேசுகையில், 'வைபவ் சூர்யவன்ஷியை அவரது போக்கில் சுதந்திரமாக விளையாட விடுங்கள். அவருக்கு வெறும் 15 வயதுதான் ஆகிறது. ஐபிஎல் தொடரில் அவர் எவ்வித அழுத்தமும் இன்றி விளையாடியதை நாம் பார்த்தோம். ஆனால் இந்திய அணிக்காக விளையாடுவது முற்றிலும் மாறுபட்டது. குறிப்பாக இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு ஆடுகளங்களில் பிட்ச் சற்று வித்தியாசமாக இருக்கும். அங்கு பந்து அதிகமாக ஸ்விங் ஆகும். பவுன்ஸ் மற்றும் வேகம் கூடுதலாக இருக்கும். இது அவருக்கு முதல் மிகப்பெரிய சவாலாக இருக்கும்' என்றார்.
மேலும் தொடர்ந்த கங்குலி, 'அவர் அபாரமான திறமை கொண்டவர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அவரிடமிருந்து எடுத்தவுடனேயே ஒட்டுமொத்த உலகையும் எதிர்பார்க்காதீர்கள். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள போதிய அவகாசம் கொடுங்கள். இந்தியாவில் உள்ள மற்ற வீரர்களைப் போல அவருக்கும் அபாரமான திறமை உள்ளது' என்று கேட்டுக்கொண்டார்.
முன்னதாக இந்திய அணித் தேர்வு குறித்து பேசிய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், 'வைபவ் சூர்யவன்ஷி தனது அபார ஆட்டத்தின் மூலம் தன்னைத் தேர்வு செய்யும்படி எங்களை கட்டாயப்படுத்திவிட்டார். அவர் ஆட்டத்தை முழுமையாக மாற்றக்கூடிய ஒரு மிகச்சிறந்த அதிரடி வீரர். நெருக்கடி நிறைந்த ஐபிஎல் தொடரில் அவர் முதிர்ச்சியுடன் சிறப்பாக விளையாடியுள்ளார். அவர் மீது எங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது' என்று புகழ்ந்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.