தமிழக பாஜகவில் இருந்து மற்றொரு முக்கிய பிரமுகர் விலகியுள்ளார். பாஜக செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது பாஜக வட்டாரத்திலும், தமிழக அரசியல் களத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை ராஜினாமா செய்த பரபரப்பு அடங்குவதற்குள், பாஜகவின் முக்கிய முகங்களில் ஒருவரான ஸ்ரீகாந்த் கருணேஷின் இந்த திடீர் விலகல் முடிவு அக்கட்சி வட்டாரத்திலும், தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீகாந்த் கருணேஷ், பாஜகவின் கருத்துக்களை பொதுவெளியில் கொண்டு சேர்ப்பதிலும், ஊடக விவாதங்களிலும் முக்கியப் பங்காற்றி வந்தவர். பிரதமர் மோடி தமிழகம் வரும்போது அவரது பேச்சையும் இவர் மொழிபெயர்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'பாரதிய ஜனதா கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து நான் விலகுகிறேன். மேலும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து விதமான பொறுப்புகளில் இருந்தும் முழுமையாக விலகிக் கொள்கிறேன்,' எனத் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஸ்ரீகாந்த் கருணேஷின் இந்த திடீர் விலகல், பாஜகவின் தற்போதைய நிலவரம் குறித்தும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இது குறித்து கட்சித் தலைமை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.