இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டிஆர்எஸ் முறையைச் சரியாகப் பயன்படுத்தத் தவறியது தங்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியதாக ஆப்கானிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிச்சர்ட் பைபஸ் புலம்பி இருக்கிறார்.
சண்டிகரில் நடைபெற்று வரும் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே டெஸ்ட் போட்டியில், ஆப்கான் வீரர்கள் தடுமாறியதால் இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட்டாவதில் இருந்து தப்பினர். முதல் நாள் ஆட்டத்தில் கே.எல். ராகுல் அவுட்டாகியிருந்தும் ஆப்கானிஸ்தான் ரிவியூ எடுக்கவில்லை. இரண்டாம் நாள் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோரும் அவுட்டாவதிலிருந்து தப்பினர்.
குறிப்பாக, அஸ்மத்துல்லா உமர்சாய் வீசிய பந்தில் கில் விக்கெட்டை இழந்திருக்க வேண்டிய தருணத்தில் ஆப்கானிஸ்தான் ரிவியூ எடுக்கத் தவறியது அவர்களுக்குப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இதுகுறித்து பேசிய ஆப்கானிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிச்சர்ட் பைபஸ், 'நாங்கள் மிகவும் மந்தமாகச் செயல்பட்டோம். முக்கியத் தருணங்களில் ரிவியூ எடுப்பதில் வீரர்களிடையே தெளிவான முடிவு மற்றும் ஒருங்கிணைப்பு இல்லை. கேப்டன் முடிவெடுக்க மிகக் குறுகிய காலமே உள்ளது. அவர் மற்ற வீரர்களின் கருத்துக்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. இந்த சொதப்பல் எங்களுக்குப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது' என்றார்.
கேப்டனின் இக்கட்டான சூழ்நிலை குறித்து விளக்கிய அவர், 'கேப்டன் முழுமையாக விக்கெட் கீப்பர் மற்றும் பந்துவீச்சாளரின் ஆலோசனைகளை நம்பியே இருக்கிறார். விக்கெட் கீப்பர் பந்தின் திசையையும், பந்துவீச்சாளர் பந்தின் உயரத்தையும் கேப்டனுக்குத் துல்லியமாக விளக்க வேண்டும். ஆனால் எங்களது தகவல் தொடர்பு சரியாக இல்லை. இதை நாங்கள் போட்டி முடிந்த பிறகு விவாதித்தோம்' என்று ரிச்சர்ட் பைபஸ் கூறினார். நடுவர்களின் முடிவுகளை விமர்சிக்க அவர் மறுத்து, 'நடுவர்கள் தங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. நாங்கள் தான் எங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்' என்றும் அவர் கூறினார்.