திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், சிறப்பு தரிசனத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பக்தர்களிடம் ரூ.1,000 வரை வசூலித்து ஏமாற்றிய நபர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். வார விடுமுறையையொட்டி ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்த நிலையில், இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சூரிபாபு என்பவர் அளித்த புகாரின்படி, மணி என்ற இடைத்தரகர், ஒருவருக்கு ரூ.1,000 பெற்றுக்கொண்டு நேரடியாக சாமி தரிசனம் செய்து வைப்பதாகக் கூறி ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து அவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். நேரடி தரிசனத்திற்கு பணம் வசூலிக்கும் இடைத்தரகர்களுக்கும், கோயில் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதால், பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களை ஏமாற்றும் இதுபோன்ற நபர்கள் மீது காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
தப்பியோடிய நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த காட்சிகளின் உதவியுடன் காவல்துறையினர் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பக்தர்களின் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.